தரமற்ற உணவு விற்ற 817 கடைகளுக்கு எதிராக வழக்கு!

சித்திரை புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுகளின் தரத்தை உறுதிப்படுத்துவதற்காக ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பல அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.பி. போரலெஸ்ஸ இது குறித்து கருத்து வெளியிடுகையில்,

இதுவரை நாடு முழுவதும் 11,064 உணவு விற்பனை நிலையங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதில் 967 விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தரமற்ற உணவுகளை விற்பனை செய்த மற்றும் சுகாதார நடைமுறைகளை மீறிய 817 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 3,045 உணவுப் பொருட்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

நுகர்வுக்குப் பொருத்தமற்ற நிலையில் காணப்பட்ட 2,299 உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் உடனடியாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சுமார் 2,300 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இந்த விசேட கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புத்தாண்டு தினமான இன்றும், அதற்குப் பின்னரான நாட்களிலும் இந்தச் சோதனைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் உணவுகளைக் கொள்வனவு செய்யும் போது அதன் காலாவதித் திகதி மற்றும் தரத்தினை அவதானிக்குமாறும், ஏதேனும் குறைபாடுகள் காணப்படின் அந்தந்தப் பகுதி பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்குத் தெரியப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.