மருத்துவரிடம் தவறாக நடக்க முயன்ற வித்தியா கொலை வழக்கு கைதி!

யாழ்ப்பாணம் புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளி ஒருவர், சிறைச்சாலையில் பெண் மருத்துவரிடம் தகாத முறையில் நடந்துக்கொள்ள முயற்சித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த கைதி தடுத்து வைக்கப்பட்டுள்ள தும்பற சிறைச்சாலையின் மருத்துவமனையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க, சூரியன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை வழங்க சென்ற பெண் மருத்துவரிடம் குறித்த கைதி, தவறாக நடந்துக் கொள்ள முயற்சித்த போது, அங்கிருந்த ஏனைய அதிகாரிகளால் சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

விசாரணை அறிக்கை கிடைத்ததன் பின்னர், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையை மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் முழு உலகையும் பேரதிர்சிக்குள்ளாக்கிய சம்பவமாக, யாழ்ப்பாணம் புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலைச் சம்பவம் பதிவாகியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு, யாழ்ப்பாண மேல்நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை அடுத்து, குற்றவாளிகள் அனைவரும் வெவ்வேறு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அவர்களில் தும்பற சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரே, பெண் மருத்துவரிடம் தவறாக நடந்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.