மட்டு.மேற்கு வலயம், உயர்தர பரீட்சை பெறுபேற்றில் முதலிடம்.

( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களில் மிகவும் பின்தங்கிய வலயமாக கணிக்கப்படுகின்ற மட்டு.மேற்கு வலயம், நேற்று வெளியான உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மாகாணத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்தது.

கிழக்கு மாகாணத்தில் 2025ஆம் ஆண்டுக்கான GCE (A/L) பரீட்சையின் (முதல் மற்றும் இரண்டாம் முயற்சி) பெறுபேறு பகுப்பாய்வு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் வெளியிட்ட இந்த அறிக்கையின் படி, மொத்த மாகாணத் தேர்ச்சி வீதம் 66.32% ஆக பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டில் மாகாண மட்டத்தில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் 74.56% தேர்ச்சி வீதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மத்திய (74.46%) இரண்டாம் இடத்தையும், திருக்கோவில் (71.68%) மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

அடுத்தடுத்த இடங்களில் மூதூர், பட்டிருப்பு, மற்றும் கல்முனை வலயங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, மாணவர்கள் அதிக அளவில் பரீட்சையில் கலந்து கொண்ட வலயங்களில் கல்முனை 71.15% தேர்ச்சி வீதத்துடன் 6ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.

மற்றொரு பக்கம், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, மகாஓயா, மற்றும் கிண்ணியா ஆகிய வலயங்களும் மாகாண சராசரியை விட மேம்பட்ட பெறுபேறுகளை பதிவு செய்துள்ளன.

மாகாண சராசரியை விட குறைவான பெறுபேறுகள் பெற்ற வலயங்களாக மட்டக்களப்பு, திருகோணமலை, கல்குடா, கந்தளாய், தெஹியட்டகண்டிய, அம்பாறை, மற்றும் திருகோணமலை வடக்கு ஆகியவை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இதில், திருகோணமலை வடக்கு 54.92% தேர்ச்சி வீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது.

மொத்தமாக 18,070 மாணவர்கள் பரீட்சைக்கு தோன்றி, 11,984 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 1,573 மாணவர்கள் 3F பெறுபேறும், 558 மாணவர்கள் 3A சிறந்த பெறுபேறும் பெற்றுள்ளனர்.