இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்!

இந்தோனேசியாவின் வடகிழக்கில் உள்ள மொலுக்கா கடல் பகுதியில், 7.4 ரிக்டர் என்ற அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் (USGS) தெரிவித்துள்ளது.

இதனால், மேற்கு ஹல்மஹேராவில் 0.3 மீட்டர் உயரத்திலும், பிதுங்கில் 0.2 மீட்டர் உயரத்திலும் சுனாமி அலைகள் ஏற்பட்டதாக இந்தோனேசியாவின் வானிலை ஆய்வு நிறுவனமான BMKG தெரிவித்தது.

வியாழக்கிழமை (02) அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 35 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவானது என்றும், இதன் மையப்புள்ளி இந்தோனேசியாவின் டெர்னேட் நகருக்கு மேற்கு-வடமேற்கே 127 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது என்றும் USGS தெரிவித்துள்ளது.

இதனால்,அண்டை நாடுகளில் சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

மனடோ பகுதியில் இடிபாடுகள் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக இந்தோனேசிய ஒளிபரப்பு நிறுவனமான மெட்ரோ டிவி செய்தி வெளியிட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க மலுக்கு தீவுகளான டெர்னேட் மற்றும் டிடோர் போன்ற சில நகரங்களில் உள்ள பிராந்திய அரசாங்கங்கள், குடிமக்களை வெளியேற்றுவதற்குத் தயார்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன.

நிலநடுக்க மையத்திலிருந்து 1,000 கி.மீ. தொலைவிற்குள் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவின் கடற்கரைகளில் அபாயகரமான சுனாமிகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, பிலிப்பைன்ஸ் கடற்கரையிலிருந்து சுமார் 580 கி.மீ. தெற்கிலும், மலேசியாவின் சபாவிலிருந்து 1,000 கி.மீ. தொலைவிலும் அமைந்திருந்தது.

அண்மைய தரவுகளின் அடிப்படையில், நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று பிலிப்பைன்ஸின் நில அதிர்வு ஆய்வு நிறுவனமான PHIVOLCS தெரிவித்துள்ளது.

அதேநேரம், தற்சமயம் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும், நிலவரங்களைக் கண்காணித்து வருவதாகவும் மலேசியாவின் வானிலை ஆய்வுத் துறை முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் சில கடலோரப் பகுதிகளில், கடல் மட்டத்திற்கு மேல் 0.3 மீட்டர் முதல் 1 மீட்டர் வரையிலான உயரமுள்ள அலைகள் தாக்கக்கூடும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், குவாம், ஜப்பான், மலேசியா, பப்புவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளின் கடற்கரைகளில் கடல் மட்டத்திற்கு மேல் 0.3 மீட்டருக்கும் குறைவான உயரமுள்ள அலைகளால் அபாயம் இருப்பதாகவும் அது எச்சரித்துள்ளது.

ஜப்பானில் 0.2 மீட்டர் வரையிலான உயரமுள்ள அலைகள் ஏற்படக்கூடும், ஆனால் எந்த சேதமும் எதிர்பார்க்கப்படவில்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பசிபிக் பெருங்கடலில் சுனாமி ஏற்படக்கூடும் என்றும் அது எச்சரித்துள்ளது.