(சுமன்)
புனரமைப்பு செய்யப்பட்ட திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட கிளிவெட்டி கோபாலபுரம் கோகுலம் முன்பள்ளி நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் தலைவர் க.இன்பராசா கலந்து கொண்டதுடன், பாலர்பாடசாலை கல்விப் பணியகத்தின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.பிரதீப், முன்பள்ளி வளவாளர் பி.எம்.எம்.றவுப், கிளிவெட்டி மகா வித்தியாலய அதிபர் ப.கோணேஸ்வரராசா, பொதுச்சுகாதாரப் பரிசோதகர், சுகாதார மாது, முன்பள்ளி ஆசிரியர்கள், பொதுச் சங்கங்களின் பிரதிநிதிகள் பெற்றோர்கள், சிறார்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த முன்பள்ளிப் பாடசாலை ஆசிரியை கந்தசமி இன்பராசா அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக புலம்பெயர் உறவுகளிடமிருந்து பெறப்பட்ட நிதி மூலம் குறித்த பாலர் பாடசாலை புனரமைப்புச் செய்யப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.
யுத்தத்தில் அதிகம் பாதிப்புற்ற, 1996ம் ஆண்டு 25க்கும் மேற்பட்ட இனப்படுகொலை இடம்பெற்றதும், பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களை அதிகமாகக் கொண்டதுமான கிராமமான குமாரபுரத்தில் இவ்வாறு பெண் தலைமைத்துவ குடும்ப சிறார்கள் கல்வி கற்கும் குறித்த பாலர் பாடசாலை தேர்வு செய்யப்பட்டு இப்புனரமைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எவ்வித அரசியல்வாதிகளாலும் கண்டுகொள்ளப்படாத இக்கிராம சிறார்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துள்ள முன்னாள் போராளிகளின் ஒன்றியமான புனர்வாழ்வளிக்கப்பட்ட சமூக மயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியம் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் முன்மொழிவின் அடிப்படையில் புலம்பெயர் உறவுகளின் நிதியுதவியின் மூலம் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த முன்பள்ளிப் பாடசாலையில் சிறார்களுக்கு இலவசமாகக் கல்வியை வழங்கவும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை புலம்பெயர் உறவிகளினூடாகப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கை செய்து கொடுப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


