போதை மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகம் ஒன்று சுற்றிவளைப்பு!

விசேட வைத்திய நிபுணர் ஒருவரின் பரிந்துரை இன்றி, மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை இளைஞர்களுக்கு விற்பனை செய்த ஹட்டன் நகரின் மருந்தக உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த மருந்துகளை மிக அதிக விலைக்கு விற்பனை செய்வதாகத் தகவல் கிடைத்திருந்தது.

அதன்படி, ஹட்டன் கிளை ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் பொலிஸ் புலனாய்வு ஒருவரைப் பயன்படுத்தி இவரைக் கைது செய்துள்ளனர்.

இதன்போது விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1400 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சோதனையை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.