பேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!

சிறந்த படைப்பாளிகளை ஃபேஸ்புக்கிற்கு (முகநூல்) ஈர்ப்பதற்காக மெட்டா ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் அது பெரும் போனஸ் தொகைகளுடன் வருகிறது.

டிக்டோக், யூடியூப் அல்லது இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே அதிகப் பின்தொடர்பாளர்களைக் கொண்ட பிரபலமான படைப்பாளிகளை இலக்காகக் கொண்டு, ஃபேஸ்புக்கில் பதிவிடுவதற்காக மட்டுமே அவர்களுக்கு மாதம் $3,000 வரை போனஸ் வழங்கும் ஒரு புதிய முயற்சியை அந்த நிறுவனம் தொடங்குகிறது.

மெட்டாவின் கூற்றுப்படி, “Creator Fast Track” என்ற இந்த திட்டத்தில் இன்ஸ்டாகிராம், டிக்டோக் அல்லது யூடியூப்பில் 100,000 அல்லது அதற்கு மேற்பட்ட பின்தொடர்பாளர்களைக் கொண்ட படைப்பாளிகள் மாதத்திற்கு $1,000 பெற முடியும்.

இந்தப் தளங்களில் குறைந்தபட்சம் ஒன்றில் ஒரு படைப்பாளிக்கு 1 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பாளர்கள் இருந்தால், வழங்கப்படும் தொகை மாதத்திற்கு $3,000 ஆக இருக்கும்.

உத்தரவாதமளிக்கப்பட்ட கொடுப்பனவுகள் மூன்று மாதங்களுக்கு மட்டுமே நீடிக்கும்.

Creator Fast Track திட்டத்தை முடித்த பின்னர் அவர்கள் தங்கள் பதிவுகளிலிருந்து தொடர்ந்து வருமானம் ஈட்டுவதற்காக, ஃபேஸ்புக் உள்ளடக்க வருமானம் ஈட்டும் திட்டத்திற்கான அணுகலும் அவர்களுக்கு உடனடியாக வழங்கப்படும்.

Creator Fast Track திட்டத்தில் இணையும் படைப்பாளிகள், போனஸ்களைப் பெறுவதற்கு தொழில்நுட்ப நிறுவனம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

அவற்றுள், ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 15 தகுதியான ரீல்களைப் பதிவிடுதல், ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 10 வெவ்வேறு நாட்களில் ரீல்களைப் பதிவேற்றுதல் மற்றும் அந்த ரீல்கள் பொதுவில் இருக்க வேண்டும் என்பன அடங்கும்.

உள்ளடக்கம் அசல் படைப்பாகவும், இதற்கு முன்னர் ஃபேஸ்புக்கில் பதிவிடப்படாததாகவும் இருக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரரும் அவரது உள்ளடக்கமும் அனைத்துத் தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து, உள்ளடக்கப் பணமாக்கல் கொள்கைகளுக்கு இணங்க வேண்டும்.

இந்த வெகுமதியானது வீடியோ படைப்புகள் மாத்திரமன்றி ஸ்டோரீஸ் மற்றும் புகைப்படங்களையும் உள்ளடக்கியது.

உத்தரவாதமான பணப் பரிமாற்றங்களுக்குக் மேலதிகமாக மெட்டா பங்கேற்பாளர்களுக்கு ஃபேஸ்புக்கில் உள்ள தனிப்பட்ட ரீல்ஸ்களுக்கு அதிக ரீச்-ஐ வழங்குகிறது.

இந்தப் பயனர் பிரிவினரைக் கவர்ந்திழுப்பதற்கான தனது பரந்த முயற்சியை மெட்டா நிறுவனம் தீவிரப்படுத்தி வரும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2025 ஆம் ஆண்டில் படைப்பாளிகளுக்கு சுமார் 3 பில்லியன் டொலர் வழங்கியதாக அந்நிறுவனம் கூறியது, இது முந்தைய ஆண்டை விட 35% அதிகமாகும்.

அந்த மொத்தத் தொகையில் சுமார் 60% ரீல்ஸ் உள்ளடக்கத்திற்கும், மீதமுள்ளவை மற்ற வடிவங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டன.

3 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருந்தாலும், ஃபேஸ்புக் படைப்பாளிகளை ஈர்ப்பதில் நீண்ட காலமாகச் சிரமப்பட்டு வருகிறது,

ஏனெனில் அவர்கள் டிக்டொக் மற்றும் யூடியூப் போன்ற தளங்களை நோக்கி ஈர்க்கப்பட்டுவிட்டனர்.

ஏற்கனவே பார்வையாளர்களைக் கொண்டவர்களை ஈர்த்து, ஃபேஸ்புக்கில் அசல் உள்ளடக்கத்தை மேம்படுத்த உதவும் ஒரு செயல்முறையின் அடுத்த கட்டமே இந்தத் திட்டம்