சர்வதேச மகளிர் தின நிகழ்வு 2026 மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில்..

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

“பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தின் பெருமை”எனும் தொனிப்பொருளை முன்னிறுத்தி சர்வதேச மகளிர் தின நிகழ்வு நேற்று (10) மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தி தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

பெண்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்தி, சமூக முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பை உயர்த்தும் நோக்கில் இந்நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது.

நிகழ்வில் பெண்களின் சமூக, பொருளாதார மற்றும் நிருவாகத் தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உரைகள், கலந்துரையாடல்கள் மற்றும் விசேட நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், கலாச்சார உத்தியோகத்தர் மற்றும் , செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.