எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கோறளைப்பற்று பிரதேச செயலகம் நடாத்திய “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்ட நிகழ்வு நேற்று (03) பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு அங்கமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
பிரதேச செயலாளர் திருமதி ஜெ. திருச்செல்வம் தலைமையில், பிரதேச செயலக போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் க.புவினராஜ் ஏற்பாட்டில் நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில்
“விற்கின்ற – அடிமையான அனைவருக்குமான அறிவித்தல் – அகன்று செல்” என்ற வாசகத்தை மையமாகக் கொண்டு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
மார்ச் 01 முதல் “முழு நாடும் ஒன்றாக – தேசிய செயல் திட்டத்துடன்” இணைந்து போதைப்பொருள் தடுப்பு வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் வழங்கப்பட்டன.
போதைப்பொருளுக்கு எதிரான வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கர்கள் பேருந்துகள் மற்றும் முற்சக்கர வண்டி என பல வாகனங்களில் ஒட்டப்பட்டன.
எமது நாட்டின் மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளின் வாழ்வை சீரழிக்கும் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை 1818 என்ற இலக்கத்திற்கு அறிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


