பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதில் அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலாக வேறு சட்டங்களை முன் மொழியாது, மக்களின் உணர்வுகளைப் புரிந்து மக்களோடு பயணிக்க அரசு தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மறைமாவட்ட மக்களுக்கு எழுதிய தவக்கால திருமடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பான்மை வாக்குகளால் ஆட்சி பீடமேறிய இன்றைய அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த பல எதிர்பார்ப்புகள், இன்றும் எதிர்பார்ப்புகளாகவே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை, பல பிரச்சினைகளுக்கு இன்றைய அரசாங்கம் தீர்வுகளைத் தராமல் காலத்தை தாமதித்துச் செல்வது மன வருத்தத்திற்குரியது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் தற்போது கடற்றொழில் சமூகம் எதிர்நோக்கும் பாரிய தொழில் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறையோடு விரைந்து செயலாற்ற வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் கோரிக்கை விடுத்துள்ளார்.


