மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) திறனை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டம்.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளின் அபிவிருத்தி தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் 14 பிரதே செயலகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்றுனர்களைப் பயிற்றுவிக்கும் செயலமர்வு இன்று (26) மாவட்ட மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கேர்வ் அப் பெளண்டேஷன் ( CurveUp⁩ Foundation) நிறுவனத்தின் ஏற்பாட்டில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளின் செயற்கை நுண்ணறிவு திறனை மேம்படுத்துவதற்கான இத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, இன்றும் (26) நாளையும் (27) என இரண்டு நாட்கள் நடாத்தப்படும் இச்செயலமர்வு, முன்னோடிப் பயிற்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் திறன் வாய்ப்பிற்கான நிதி ஆசிய பசுபிக் இன் AVPN உடன் இணைந்து, Google.org மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் ஆதரவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் போது சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியில் செயற்கை நுண்ணறிவு திறனை (AI) எவ்வாறு பயன்படுத்துதல், வேலைத் திறனை முன்னேற்றுதல், நேரம் மற்றும் செலவுகளை மீதப்படுத்துதல், தொழில் முயற்சியை எவ்வாறு முன்னோக்கிக் கொண்டு செல்லுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக கேர்வ் அப் அமைப்பின் உத்தியோகத்தர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.