வரலாறும் தியாகமும் அறியாமல் பேசும் அரசியல் விமர்சனங்கள் கண்டிக்கத்தக்கவை

நூருல் ஹுதா உமர்

புத்தளம்–மன்னார் வீதி தொடர்பில் சமீப காலமாக முன்வைக்கப்படும் அரசியல் விமர்சனங்கள் பிரதி அமைச்சர் முனீர் முளபரின் வரலாறும் முதிர்ச்சியும் இல்லாத பொறுப்பற்ற அரசியல் மனப்பான்மையின் வெளிப்பாடாகவே காணப்படுகின்றன என கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை அமைப்பாளருமான எம்.ஐ.எம். அப்துல் மனாப் தெரிவித்துள்ளார்.

அகதி வாழ்க்கையின் வலிகளில் இருந்து அரசியலுக்கு வந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியூதீன் அவர்கள், வடக்கும் கிழக்கும் பெற்ற ஒரு வரலாற்றுத் தலைவர் ஆவார். சமூகத்திற்காக ஒரு குடும்பமே சிறைவாசம் அனுபவித்தது, அவரின் விடுதலைக்காக ஒரு நாடே துஆ செய்தது போன்றவை, அவரது அரசியல் தியாகத்தின் ஆழத்தை வெளிப்படுத்துகின்றன.

மழைக்காலங்களில் ஓட்டை வீடுகளில் நனைந்த மக்கள், பாதைகள், பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள், விளையாட்டு மைதானங்கள் இல்லாமல் தவித்த சமூகங்கள், திகண–அம்பாறை கலவரங்கள் மற்றும் மக்கள் வெளியேற்றப்பட்ட கொடிய தருணங்கள் என பல்வேறு நெருக்கடிகளில், இன, மத, மொழி வேறுபாடுகளைப் பார்க்காமல், ரிஷாட் பதியூதீன் செயலால் பதில் வழங்கியுள்ளார்.

100 கிலோமீட்டருக்கும் அதிக நீளமுடைய புத்தளம்–மன்னார் வீதி, பல பில்லியன் ரூபா செலவுத் தேவையுடன், அரசிடம் நிதி இல்லாத சூழலிலும் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனையாகும். இதன் மூலம் 100 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட பயண தூரம் குறைக்கப்பட்டுள்ளதுடன், இது இலங்கையின் அபிவிருத்தி வரலாற்றில் பொன் எழுத்தால் பதியப்பட வேண்டிய ஒன்றாகும்.

இன்று இந்த வீதி தொடர்பில் எழும் அரசியல் வாதங்களில், தலைவர் ரிஷாட் பதியூதீன் அவர்களின் ஆளுமையும், அர்ப்பணிப்பும் யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். இந்தப் பாதை திறக்கப்படும் என்ற உறுதியான நம்பிக்கை மக்களிடையே உள்ளது; ஏனெனில் இது வாக்குறுதி அரசியல் அல்ல, நிரூபிக்கப்பட்ட செயல் அரசியல்.

அரசியல் முதிர்ச்சியற்ற விமர்சனங்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும், வரலாறும் தியாகமும் கொண்ட தலைவர்களை சரியான முறையில் மதிப்பிட வேண்டிய தருணம் இது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.