நூருல் ஹுதா உமர்
பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மருத்துவச் சேவைகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, கடந்த சனிக்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை, சேவை வழங்கலில் காணப்படும் சவால்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம். மாஹிர், பிராந்திய மருத்துவ ஆய்வுகூட பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச். றிஸ்பின் ஆகியோர் கலந்துகொண்டு, தங்களது தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்தனர்.
மேலும், பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக் குழு சார்பில் வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி எம். தனோர்ஷன், டொக்டர் திருமதி சித்ரா தேவராஜன், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் முன்னாள் பிரதேச செயலாளர் திரு. வீ. பாபாகரன் உள்ளிட்ட அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது, வைத்தியசாலையின் எதிர்கால கட்டமைப்பு அபிவிருத்திகள், புதிதாக முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள், நிர்வாக மற்றும் வளப் பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகள், நீண்டகால தேவைகள் மற்றும் நோயாளிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் ஆகியவை அபிவிருத்திக் குழுவினரால் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், அவற்றில் சிலவற்றுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கியதுடன், ஏனைய அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.


