ஒரே நாளில் சடுதியாக உயர்வடைந்த தங்கம்…!

சர்வதேச சந்தையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் வர்த்தகப் போர் அச்சம் காரணமாக, இலங்கை சந்தையில் இன்று (21) தங்கம் விலை இரண்டாவது முறையாகவும் சடுதியாக உயர்ந்துள்ளது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, இன்று (21) முற்பகல் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 10,000 ரூபாயால் அதிகரித்திருந்த நிலையில், மீண்டும் தற்பொழுது பவுண் ஒன்றுக்கு 5000 ரூபாயால் சடுதியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று தற்பொழுது 385,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,125 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,516 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் பவுண் ஒன்றுக்கு 15,000 ரூபாய் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 4,800 அமெரிக்க டொலர்களைத் தாண்டியதே உள்ளூர் சந்தையில் இந்த அதிரடி மாற்றத்திற்கு முக்கிய காரணமாகும்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான வர்த்தகப் போர் பதற்றங்கள் உலகளாவிய முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கி ஈர்த்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.