மட்டக்களப்பு சர்வோதயா கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு சர்வோதயா கிராம சேவகர் பிரிவில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமானது மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி இளையதம்பி உதயகுமார் தலைமையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது .

வளமான நாடு அழகான வாழ்க்கை என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நகரில் பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இடம் பெற்றது.

இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் அமைந்துள்ள சர்வோதயத்தின் அனுசரணையில் சர்வோதயா கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது .

சத்துருக்கொண்டான் பகுதிகளில் உள்ள வீடுகள் , கிணறுகள், வீதிகள் பரிசோதனை செய்யப்பட்டன. , டெங்கு நுளம்புகளின் பெருக்கம் இடம் பெறுவதற்கு வாய்ப்புள்ள தெளிந்த நீர் தேங்கக்கூடிய பொருட்கள் , கைவிடப்பட்ட சிரட்டைகள், யோகட் கப்கள், பிளாஸ்ரிக் மற்றும் மட்பாண்டப் பொருட்கள், பொலித்தீன் பைகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பொது சுகாதார பரிசோதகர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் , கிராம உத்தியோகஸ்தர் மண்முனை வடக்கு செயலக பிரிவின் சுற்றாடல் உத்தியோகஸ்தர், சர்வோதய அமைப்பின் உத்தியோகத்தர்கள், கிராமமட்ட இளைஞர் கழகங்கள் டெங்கு களப்பணியாளர்கள் மற்றும் கொக்குவில் போலீஸ் நிலைய அதிகாரிகள், மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றிருந்தார்கள்.