நள்ளிரவு முதல் உயர்தரப் பரீட்சை கருத்தரங்குகளுக்கு தடை!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாத பாடங்களுக்கான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் இன்று(6) நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மின்னணு அல்லது அச்சு ஊடகங்கள் மூலம் கல்வி வகுப்புகளை நடத்துதல், பாடம் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள் நடத்துதல், யூக கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் பதாகைகள் அல்லது பிரசுரங்களை வெளியிடுதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவுகளை மீறும் எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் கருதப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

இதுபோன்ற மீறல்கள் ஏதேனும் இருந்தால் அருகிலுள்ள காவல் நிலையம், காவல் தலைமையகம், 119 காவல் அவசர தொலைபேசி எண் அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் அவசர தொலைபேசி எண் 1911 ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் ஜனவரி 12 முதல் ஜனவரி 20, வரை நாடு முழுவதும் உள்ள 2,362 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.