(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதரகத்தின் பூரண கண்காணிப்பின் கீழ், சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சின் பூரண அனுசரணையுடன், இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்தும் அல்குர்ஆன் மனனப் போட்டியினை கடந்த இரண்டு ஆண்டுகள் (2023, 2024) சிறப்பாக நடாத்தியதைத் தொடர்ந்து இவ்வாண்டும் (2025) மூன்றாவது தடவையாக நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் போட்டி தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இப்போட்டியின் இறுதிப் போட்டியானது எதிர்வரும் 2025 டிசம்பர் மாதத்தின் ஆரம்பப் பகுதியில் கொழும்பில் நடாத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்போட்டிகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரபுக் கல்லூரிகள், ஹிப்ழுல் குர்ஆன் மத்ரஸாக்கள் மற்றும் அரச பாடசாலைகள் அல்லது அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களை மையப்படுத்தி ஆண், பெண் இரு பாலாருக்கும் நான்கு பிரிவுகளாக நடாத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெறும் போட்டியாளர்கள் சவூதி அரசாங்கத்தினால் பெறுமதியான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுவர்.
மேற்படி போட்டியில் பங்குபற்றுவதற்கு தகுதியான போட்டியாளர்களைத் தெரிவு செய்யும் ஆரம்பகட்டப் போட்டி 2025 நவம்பர் மாதம் பிராந்திய ரீதியாக நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போட்டிகள் கொழும்பு, கண்டி, மட்டக்களப்பு, குருணாகல், வவுனியா போன்ற நிலைகளில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, போட்டிகள் கீழ்வரும் பிரிவுகளில் நடைபெறும்
பிரிவு -01, அல்குர்ஆன் முழுவதும், (சூரதுல் பகறா முதல் 1 30 வரையான ஜூஸ்உகள்), ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம், வயது 15-23 வரை.
பிரிவு -02, ஆரம்ப பத்து ஜூஸ்உகள், (சூரதுல் பகறா முதல் 1 -10 வரையான ஜுஸ்உகள்), ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வயது 12-20 வரை.
பிரிவு – 03, ஆரம்ப ஐந்து ஜூஸ்கள், (சூரதுல் பகறா முதல் 1 – 05 வரையான ஜுஸ்உகள்), ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வயது10-15 வரை.
பிரிவு – 04, ஆரம்ப இரண்டு ஜூஸ்உகள், (அலிப் லாம் மீம் சயகூலு 1,2 ஆகிய ஜூஸ்உகள்) அல்லது (தபாரகல்லதிஅம்மா 29,30 ஆகிய ஜூஸ்உகள்), ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வயது 07-12 வரை.
போட்டியின் நிபந்தனைகள்: இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அரபுக் கல்லூரி, ஹிப்ழ் குர்ஆன் மத்ரஸா, அரச பாடசாலைகள் அல்லது அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் கல்வி கற்பவராக இருத்தல், ஒரு போட்டியாளர் ஒரு பிரிவில் மாத்திரமே கலந்துகொள்ள முடியும், போட்டியாளர்கள் ஏதாவது ஒரு சர்வதேச போட்டியில் ஏற்கனவே கலந்துகொள்ளாதவராகவும், கடந்த 2023,2024 ஆம் ஆண்டுகளில் சவூதி தூதரகத்தால் நடாத்தப்பட்ட போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெறாதவராகவும் இருத்தல் வேண்டும், அடையாள அட்டை /விண்ணப்பதாரிகளின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், செல்லுபடியாகும் கடவுச் சீட்டின் சான்றுப் பிரதிகள். மேலும், அடையாள அட்டை இல்லாதவர்கள் 2″X2″ அளவிலான புகைப்படத்தின் பின்பக்கத்தில் பெயர், முகவரி என்பவற்றை குறிப்பிட்டு கல்லூரி அதிபர் மூலம் அத்தாட்சிப்படுத்தி போட்டியின் போது சமர்ப்பித்தல் வேண்டும், 2025.11.30 ஆம் திகதியில் போட்டிப்பிரிவுக்குரிய வயது கணிக்கப்படும், போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்பட மாட்டாது,
போட்டி முடிவுகள் தொடர்பாக நடுவர்களின் தீர்மானமே இறுதியானதாகும், போட்டியாளர்கள் திணைக்களத்தின் விதிகளை மீறும் பட்சத்தில் போட்டியில் பங்குபற்றும் தகைமையை இழந்தவராக கருதப்படுவர், டிசம்பர் மாதம் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு பிராந்தியத்தில் இருந்து தெரிவு செய்யப்படும் போட்டியாளர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர், பிராந்தியங்களில் இருந்து தெரிவுசெய்யப்படும் போட்டியாளர்களின் எண்ணிக்கையை இத்திணைக்களமே தீர்மானிக்கும்.
விண்ணப்பங்களை google form ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும். Google link https://forms.gle/DunA6FwtrMs3eZ2j8
விண்ணப்பதாரிகள் இதன் (Hard copy) யை போட்டியில் கலந்து கொள்ளும் அன்றைய தினம் சமர்ப்பித்தல் வேண்டும்.
குறிப்பு: google form ஊடாக மாத்திரமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். அதை விடுத்து தபால் மூலமோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்ப முடிவுத் திகதி: 2025.11.09


