எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழும் உதவி பிரதேச செயலாளர் சத்தியகௌரி தரணிதரனின் நெறிப்படுத்தலில்
பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளர் சி. ஸ்ரீதரன் அவர்களின் ஒத்துழைப்புடனும்
மண்முனை தென் எருவில்பற்று கோட்டத்திற்குட்பட்ட சகல பாடசாலையில் தரம் 10ல் கல்வி பயிலும் 1021 மாணவர்களுக்கான சிறுவர் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு பரீட்சை கோட்டத்தில் உள்ள 19 பாடசாலைகளிலும் அதிபர்களின் தயார்படுத்தலுடன் (20/09/2025) இடம்பெற்றது.
இப் பரீட்சை சிறுவர்கள் ஆபத்தான சூழலுக்கு முகம் கொடுக்க கூடிய வேளையில் பாதுகாப்பு பெறும் படிமுறைகள் தொடர்பாக எவ்வாறான முறைமையினை அறிந்திருக்க வேண்டும் எனும் சிந்தனையின் அடிப்படையில் கட்டிளமைப்பருவ சிறுவர்கள் மத்தியில் தமது பாதுகாப்பு பொறிமுறைகள் மற்றும் சிறுவர்களுக்குரிய கடமைகள், பொறுப்புகள், கட்டாயக் கல்வியின் அவசியம், இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு சட்ட ஏற்பாடுகள், சிறுவர் பாதுகாப்பு பொறிமுறைகள், மற்றும் பாதுகாப்பான இணைய பாவனை, சிறுவர்கள் தொடர்பான சமகால போக்குகள், குழந்தை விருத்தி படிநிலைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்புடன் தொடர்புடைய ஏனைய விடயங்களையும் விடய பரப்பாக
கொண்டமைந்ததுடன் அவர்களது அறிவுத்திறன் மற்றும் மனப்பாங்கு விருத்தியினை மேம்படுத்துவதையும் அடிப்படையாகக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
“உலகை வழிநடாத்த அன்பால் போசியுங்கள்” என்னும் இவ்வாண்டுக்கான (2025) சிறுவர் தின கருப்பொருளை மையமாகக் கொண்டு இவ் மதிப்பீட்டு பரீட்சை இடம்பெற்றது.
இப் பரீட்சைக்கான விடைத்தாளினை பாடசாலை மட்டத்தில் சேகரிக்கும் பணியை கிராம உத்தியோகத்தர்கள் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் விசேட நிகழ்ச்சி திட்டத்தினை மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களான ம.புவிதரன் மற்றும் செ.சக்திநாயகம்
ஆகியோருடன் சிறுவர் பெண்கள் பிரிவினர் ஒருங்கிணைப்பு செய்தனர்.


