ஹஸ்பர் ஏ.எச்_
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மற்றும் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் அரசகரும மொழிகள் தினம் மற்றும் அரசகரும மொழிகள் வாரத்தை முன்னிட்டு திருகோணமலை கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலையில் நடைபெற்ற போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வு இன்று (12) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
மொழி என்பது ஒரு தொடர்பு ஊடகம் என்றும், கடந்த காலங்களில் மொழி மூலமாக நமது நாடு பல பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், அவற்றுக்கான தீர்வுகளைக் காண நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு நிறுவப்பட்டது என்றும் இதன்போது பிரதி அமைச்சர் கருத்து தெரிவித்தார்.
நமது நாட்டில் பயன்படுத்தப்படும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளைக் கற்றுக்கொள்வது குடிமக்களாகிய அனைவரின் பொறுப்பாகும். இது சமூகத்தில் பணிபுரியும் போது ஏற்படும் பிரச்சினைகளைக் குறைக்கும் என மேலும் கூறினார்.
தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் ஊடாக 2019 ஆம் ஆண்டு முதல் செயற்படும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 01ஆம் திகதி முதல் ஜூலை 05 ஆம் திகதி வரையிலான 05 நாட்கள் கொண்ட காலவரையறையை அரசகரும் மொழிகள் தினம் மற்றும் அரச கரும மொழிகள் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட இணைப்பாளர் தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உத்தியோகத்தர் மும்தஸ்ரின், பாடசாலை ஆசிரியர்கள், இளைஞர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


