வெளிநாட்டு பயணிகளின் பாதுகாப்பினை உறுதிப் படுத்த பாதுகாப்பு ஏற்பாடு

பாறுக் ஷிஹான்

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை காரணமாக பொத்துவில் அறுகம்பே பிரதேசம் உல்லாசப் பிரயாணிகளால் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.இங்கு வருகை தரும் உள்ளுர் வெளிநாட்டு பயணிகளின் பாதுகாப்பினை உறுதிப் படுத்துவதற்காகவும் கடலலை விளையாட்டில் ஈடுபடுபவர்களையும் பாதுகாப்பதற்கென அரச பாதுகாப்புப் படையினர்கள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக அம்பாறை மாவட்டம் பொத்துவில் அறுகம்பை பகுதி சுற்றுலா இடங்களை நோக்கி செல்லும் போது ஊறணி பகுதியில் இருந்து பொத்துவில் நகரப்பகுதி வரை இராணுவம் பொலிஸார் கடற்படையினரின் தற்காலிக வீதி தடையுடன் கூடிய வீதி சோதனை சாவடி அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. இதன் காரணமாக கடும் பாதுகாப்பு கெடுபிடிக்கு மத்தியில் பொதுமக்கள் தமது அன்றாட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முக்கிய சந்திகள் இதர வர்த்தக நிலையங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் புலனாய்வாளர்கள் என மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தவிர சந்தேகத்திற்கிடமாக இப்பகுதிகளுக்கு வருகை தந்தவர்கள் துருவித் துருவி விசாரிக்கப்பட்டதுடன் இரவு வேளையில் இடையிடையே தற்காலிக வீதி தடைகள் பரிசோதனையும் பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டது.இது தவிர சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் மோப்பநாய்களின் உதவியுடன் சோதனை செய்யப்படுகின்றன..அத்துடன் இடையிடையே விசேட அதிரப்படையினரின் ரோந்து சேவையும் இடம்பெற்றது.

மேலும் வீடுகள் கட்டடங்களில் பாதுகாப்பு தரப்பினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்..சில இடங்களில் ட்ரோனின் உதவியுடன் வான் பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அண்மைக்காலமாக இஸ்ரேல் நாட்டில் இருந்து பொத்துவில் பகுதிக்கு அதிகளவான உல்லாசப்பிரயாணிகள் வருகையை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முப்படையினர் மற்றும் பொலிஸார் இவ்வாறு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இச்சோதனை சாவடிகளில் பொலிஸார் சந்தேகத்திற்கிடமான வாகனங்களை இடைமறித்து சோதனை செய்வதுடன் தற்காலிக வீதி தடைகளையும் ஏற்படுத்தி அப்பகுதியால் சென்று வரும் வாகனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அறுகம்பே மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் இஸ்ரேலியர்கள் அதிகமாக அலைச்சறுக்கு (surfing) நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் எனவே அவர்களுக்கு எதுவித ஆபத்து நேரிடாமல் இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.