பாறுக் ஷிஹான்
தீ விபத்து மற்றும் அது தொடர்பான அனர்த்த நிலைமைகளின் போது தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக சுகாதார உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கான பயிற்சி நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது,
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் வழிகாட்டலில் பிராந்திய பொது சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.அஜ்வத் அவர்களின் ஒருங்கிணைப்பில் குறித்த பயிற்சி செயலமர்வு இடம்பெற்றது.
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.பி.அப்துல் வாஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் கல்முனை பிராந்தியத்தில் உள்ள வைத்தியசாலைகள் உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களிலிருந்து குறித்த பயிற்சி செயலமர்விற்காக தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டர்.
இதன்போது வைத்தியசாலை உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களில் தீ விபத்து மற்றும் அது தொடர்பான அனர்த்தங்கள் இடம்பெறுகின்ற போது அதனைக் கட்டுப்படுத்துவது உயிர் உடமைகளை பாதுகாப்பது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்முறை பயிற்சிகளும் இடம்பெற்றது.
பிராந்திய தர முகாமைத்துவ மற்றும் சுற்றுச்சூழல் தொழில்சார் உணவுப் பாதுகாப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத், கல்முனை மாநகர சபை தீயணைப்பு பிரிவு உத்தியோகத்தர் ஏ.ஆர்.கே.மிஹார் ஆகியோர் இந்நிகழ்வில் வளவாளர்களாக கலந்துகொண்டு விளக்கமளித்ததுடன் செய்முறை பயிற்சிகளையும் வழங்கினர்.


