( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு ஸ்ரீ பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழா நாளை சனிக்கிழமை (05) முற்பகல் 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.
நாளை சனிக்கிழமை காலை 7 மணிக்கு காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திலிருந்து கொடிச்சீலை சம்பிரதாயபூர்வமாககொண்டுவரப்பட்டு கொடியேற்றப்படும் என ஆலய பரிபாலன சபையின் தலைவரும், முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளருமான இரா.தவராசா தெரிவித்தார்.
தொடர்ந்து, ஒன்பது நாட்கள் திருவிழாக்கள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில், மகோற்சவ குரு சுவிஸ் தூண் வரசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிவ பிரபாகரக் குருக்கள் முன்னிலையில் நடைபெறும்.
பத்தாம் நாள், எதிர்வரும் 14ஆம் தேதி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு சித்திரத்தேரோட்டம் இடம்பெறும்.
எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை
சமுத்திர தீர்த்தோற்சவமும், கொடியிறக்கமும் இடம்பெறும்.
திருவிழா காலங்களில் தினமும் காலை 9 மணிக்கு அபிஷேக பூஜையுடன் ஆரம்பமாகி மாலை 6 மணிக்கு இரவு திருவிழாக்கள் இடம்பெறும்.
09 ஆம் திகதி மாம்பழத்திருவிழா, 11 ஆம் திகதி வேட்டைத் திருவிழா,12 ஆம் திகதி பாற்குடபவனி,13 ஆம் திகதி முத்துச்சப்பர ஊர்வலம் என்பன சிறப்பாக இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தலைவர் இரா.தவராசா மேலும் தெரிவித்தார்.


