மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடமேல் மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
அதேநேரம் சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஓகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை சூரியன் இலங்கையின் பல்வேறு அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது
அதன்படி, இன்று (29) நண்பகல் 12:11 மணியளவில் பல்லவநாயகன்கட்டு, அக்கரயன்குளம், அறிவியல் நகர், புதுக்குடியிருப்பு மற்றும் ஆனந்தபுரம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சிகொடுக்கவுள்ளது.


