இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு விசேட சட்ட, நிர்வாக பயிற்சி

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி
மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான விசேட சட்ட,
நிர்வாக வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நேற்று இடம்பெற்ற இந்தப் பயிற்சிப்
பட்டறையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்
சாணக்கியன் இராசமாணிக்கம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரதிநிதிகள்
கலந்துகொண்டனர்.

CII அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பயிற்சிப் பட்டறையின் போது,
உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில்
பல்வேறு முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன.

குறிப்பாக, உள்ளூராட்சி மன்றங்களில் சட்டங்களை எவ்வாறு உருவாக்குவது,
உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை எவ்வாறு முறையாகவும்
சட்டரீதியாகவும் பயன்படுத்துவது மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின்
வருமானங்களை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்
தொடர்பில் உறுப்பினர்களுக்கு விரிவான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

பயிற்சிப் பட்டறையின் விசேட நெறியாளர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
சட்டத்துறை விரிவுரையாளர் திருமதி கோசலை மதன் மற்றும் உள்ளூராட்சி மன்ற
சம்மேளனங்களின் பிரதிநிதி பிரதீப் ஆகியோர் கலந்துகொண்டு, சட்ட மற்றும்
நிர்வாக விடயங்கள் தொடர்பில் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு விளக்கங்களை
வழங்கினர்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டபூர்வ
அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளை முறையாகப் புரிந்துகொண்டு, அவற்றை
மக்களின் நலனுக்காக திறம்பட பயன்படுத்துவதற்கான அறிவையும் திறனையும்
மேம்படுத்துவது இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.

இந்தப் பயிற்சிப் பட்டறையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்
சி.வி.கே. சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும்
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் உள்ளிட்ட கட்சியின்
முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை சட்டரீதியாகவும் நிர்வாக
ரீதியாகவும் மேலும் வலுப்படுத்துவதற்கும், மக்களுக்கான சேவைகளை திறம்பட
முன்னெடுப்பதற்கும் இவ்வாறான பயிற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக
அமைந்துள்ளன.