( வி.ரி.சகாதேவராஜா)
திருகோணமலை, கன்னியா காயத்திரி பீட ஆத்மயோக ஞானசபா ஆலயத்தின் புனராவர்த்தன ஏககுண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்திப் பெருவிழா, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை சிறப்பாக நடைபெறவுள்ளது.
இதனையொட்டி, செப்டெம்பர் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிரியாரம்பம் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து செப்டெம்பர் 12ஆம் திகதி சனிக்கிழமை எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வாக செப்டெம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மஹாகும்பாபிஷேகம் காலை 9.05 மணிமுதல் 10.30 வரையிலான சுபமுகூர்த்த வேளையில், காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளின் ஆசீர்வாதத்துடன், சிறப்பாக இடம்பெறவுள்ளது.
நுவரெலியா காயத்ரி பீட இலங்காதீஸ்வரர் ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ யோ.கோமகன் குருக்கள் முன்னிலையில் கும்பாபிஷேக பெருவிழா நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேக பெருவிழாவைத் தொடர்ந்து, பன்னிரண்டு நாட்கள் மண்டலாபிஷேக பூஜைகள் இடம் பெறும்.
அன்னதானமும் இடம்பெறும்.
ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இவ்விழாவில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, சுவாமிகளின் அருளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


