சீருடை சுற்றுநிருபத்தை முறையாக அமுல்படுத்த கோரி கல்முனையில் சுகாதார உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

( வி.ரி. சகாதேவராஜா)
சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பான சுற்றுநிருபத்தை முறையாக அமுல்படுத்துமாறு கோரி கல்முனையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது .

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இன்று (17) திங்கள் கிழமை காலை அரைமணி நேரம் அங்குள்ள சுகாதார உதவியாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் “சுகாதார அமைச்சின் சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பான சுற்று நிருபத்தை சாதி இன மத பேதமின்றி சகலருக்கும் பொதுவாக முறையாக அமல்படுத்துங்கள். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவரவர் கலாச்சார உடை அணிந்து வருவதற்கு அனுமதி தாருங்கள் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

சீருடை சுற்றுநிருபத்தை முறையாக
அமுல்படுத்துமாறு கோரும் பதாகைகளையும் ஏந்தி இருந்தார்கள்.

அதேவேளை, சுகாதார நிரந்தர தொழிலாளர்களின் கூட்டு தொழிற்சங்கமும் மிகவிரைவில் இவ்வாறான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக தெரிய வருகிறது.

கடந்த 15 நாட்களாக வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் சுகுணன் விபத்து சுகவீனம் காரணமாக கடமைக்கு வருகை தரவில்லை. அந்த சூழலில் இந்த ஆர்ப்பாட்டம் அங்கு இடம் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.