தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை கணிசமாகக் குறைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுடன் தனக்கு மிகச் சிறந்த உறவு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அமெரிக்கா மற்றும் தென் கொரியா நடத்தும் இராணுவப் பயிற்சிகள் அதிக செலவுடையவை என்றும், அவை பொருத்தமற்ற மற்றும் விரோதமான சமிக்ஞையை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயிற்சிகளுக்கான செலவுகளில் பெரும்பகுதியை வழக்கம் போல் அமெரிக்காவே ஏற்றுக்கொள்வதாகவும் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் வருடாந்த கூட்டு இராணுவப் பயிற்சியான “Ulchi Freedom Shield” திட்டமிட்டபடி நடைபெறும் என தென் கொரியா தெரிவித்துள்ளது.
11 நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் சுமார் 18,000 தென் கொரிய இராணுவத்தினர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த பயிற்சிகளை இரத்து செய்வதற்கு மிகவும் தாமதமாகிவிட்டதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன்,ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்காவின் முயற்சியில் தென் கொரியா இணைவதற்கு மறுத்துள்ளதாகவும் ட்ரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு இராணுவப் பயிற்சிகள் ஆக்கிரமிப்புப் போருக்கான ஒத்திகை என வட கொரிய வெளியுறவு அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்திருந்தது.
வட கொரியா அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட பெலிஸ்டிக் ஏவுகணைச் சோதனைகளையும் மேற்கொண்டுள்ளது.
சுமார் 28,500 அமெரிக்க இராணுவத்தினர் தற்போது தென் கொரியாவில் நிலைகொண்டுள்ளனர்.
2019ஆம் ஆண்டு ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் இடையிலான உயர்மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த பின்னர், வட கொரியா தனது அணு மற்றும் ஏவுகணைத் திட்டங்களை விரிவுபடுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
அதேநேரம்,தென் கொரியாவுடனான இராணுவப் பயிற்சிகள் தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்டுள்ள கருத்து, அமெரிக்கா–தென் கொரியா உறவில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


