கடந்த ஆறு ஆண்டுகளில் நாட்டின் சிறைச்சாலைகளில் இருந்தோ அல்லது சிறைக் காவலில் இருந்தோ மொத்தம் 1,181 கைதிகள் தப்பியோடியுள்ளதாக கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 472 பேர் மட்டுமே பின்னர் மீளக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 709 கைதிகள் தங்களது தண்டனைக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யாமல் இதுவரை கைது செய்யப்படாது தலைமறைவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறைச்சாலைகளுக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் காணப்படுவது தொடர்பிலும் கணக்காய்வாளர் அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டில் நாட்டின் 22 சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது 5,083 கைத்தொலைபேசிகள், 4,149 சிம் அட்டைகள் மற்றும் 2,432 மின்கலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தப்பியோடிய கைதிகள் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பதும், சிறைச்சாலைகளுக்குள் கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் தடையின்றி கிடைப்பதும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என கணக்காய்வாளர் அலுவலகம் எச்சரித்துள்ளது.
சிறைச்சாலைகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதுடன், தப்பியோடிய கைதிகளை விரைவாகக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும், சிறைச்சாலைகளுக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கொண்டுவரப்படுவதைத் தடுப்பதற்கான கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட வேண்டியதன் அவசியமும் இதன்மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


