மட்டக்களப்பில் எல்-நினோ காலநிலை மாற்றத்தால் பயிர்ச் செய்கையில் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் விழிப்புணர்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பில் எல்-நினோ காலநிலை மாற்றத்தினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில் இன்று (11) நடைபெற்றது.

மாவட்ட விவசாயப் பணிப்பாளர் ஆர்.சிவநேசன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயத்துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

தற்போது உலகளாவிய ரீதியில் அதிகம் பேசப்படும் எல்-நினோ காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்கள், அதன் காரணமாக விவசாயத் துறையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விவசாயிகளுக்கு விரிவான விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் எஸ் .ராஜேஸ்கண்ணா அவர்களினால் காலநிலை மாற்றத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கும், பயிர்ச் செய்கையைப் பாதுகாப்பாக முன்னெடுப்பதற்கும் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

குறிப்பாக, வறட்சியான காலநிலையின்போது நிலத்தடி நீரைப் பாதுகாத்து, நீர் சேமிப்பை அதிகரிப்பதன் அவசியம், காலநிலை மாற்றங்களைத் தொடர்ந்து அவதானித்தல், பயிர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்கள் மற்றும் பூச்சித் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

மேலும், சிறுதானியங்கள், மரக்கறிகள் மற்றும் பழ வகைகளைச் சிறந்த முறையில் உற்பத்தி செய்வதற்கான நவீன விவசாய முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

அத்துடன், எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடிய கடும் வெப்பநிலையைத் தாங்கக்கூடிய பயிர் வகைகளைத் தெரிவுசெய்து பயிரிடுவதன் அவசியம் தொடர்பிலும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு ஏற்ப விவசாயிகள் தமது பயிர்ச் செய்கை முறைகளை மாற்றியமைத்து, நிலையான மற்றும் சிறந்த விவசாய உற்பத்தியைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் திணைக்கள தலைவர்கள், துறைசார் நிபுணர்கள், விவசாய போதனா ஆசிரியர்கள், விவசாய அமைப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.