கட்டைபறிச்சான் பாலத்துக்கு அருகாமையில் திண்மக்கழிவுகள் கொட்டுவதால் துர்நாற்றம்

கட்டைபறிச்சான் பாலத்துக்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதனால் இந்த இடத்தினூடாகப் பிரயாணம் செய்யும் பொது மக்கள் சுகாதார ரீதியான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை காணப்படுகின்றது என மூதூர் கிழக்கு ஒருங்கிணைந்த கிராம மட்ட அமைப்புக்கள் மூதூர் பிரதேச சபை தவிசாளரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பிட்ட கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது தங்களது பிரதேச சபைக்கு உட்பட்ட அவ் விடத்திலிருந்து துர்நாற்றம் வீசுவதுடன் கழிவுகளும் வீதியோரத்தில் சிதறிக்காணப்படுகின்றமை , கால் நடைகள் மற்றும் நாய்கள் அக்கழிவுகளை உட்கொள்வதுடன் வீதி விபத்துக்கள் ஏற்படக் கூடிய அபாயகரமான நிலைமையும் காணப்படுகின்றது.

எனவே இவ் பொருத்தமற்ற இடத்தில் கழிவுகளைக் கொட்டுவதை நிறுத்தி வேறு பொருத்தமான இடத்தில் இதனை மேற்கொள்ளுமாறும் பொது மக்கள் எதிர்நோக்கும் சுகாதாரப் பிரச்சனைகளைத் தவிர்த்து அவர்கள் இடையூறற்ற வகையில் வீதியினால் போக்குவரத்தில் ஈடுபட உதவி செய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டு கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இக் கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட பலருக்கும் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.