காத்தான்குடி பிரதேச செயலகத்தின் தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) செயலமர்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு (21) காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜுத் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம் பெற்ற இச்செயலமர்வில் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பப் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. ஏ. எல்.முகமட் றிப்கி அவர்கள் வளவாளராக (Resource Person) கலந்து கொண்டு, நவீன பொதியிடல் முறைகள், பொருட்களின் தர மேம்பாடு, பொதியமைப்பின் முக்கியத்துவம் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

உள்ளூர் சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களின் தரத்தையும் சந்தைப்படுத்தல் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில், பொருட்களின் பொதியிடல் முறைகள், கவர்ச்சிகரமான பொதியமைப்பு, தரநிலைகள், பெயரிடல் (Labelling), வர்த்தகப் பெறுமதி உயர்த்தும் உத்திகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். வினோத், காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் பயனாளிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, பொதியிடல் தொடர்பான நவீன நடைமுறைகள் மற்றும் சந்தைத் தேவைகள் குறித்து பயனுள்ள அறிவைப் பெற்றுக்கொண்டனர்.