நாட்டின் சில பகுதிகளில் இன்று (15) சிறியளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, நாட்டின் ஏனைய பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும் எனவும் அந்தத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், அத்துடன் மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்காக வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று (14) மாலை 6 மணிக்கு வெளியிட்டுள்ளது.
அதன்படி, குறித்த மாவட்டங்களில் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் போதியளவு நீர் அருந்துவதுடன், நீண்ட நேரம் நேரடி வெயிலில் இருப்பதைத் தவிர்த்து, வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடும்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


