வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் நாளை (01) முதல் அமுல்படுத்தப்பட வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வருடாந்த பேருந்து கட்டண திருத்தக் கொள்கையின்படி, இம்முறை பேருந்து கட்டணம் திருத்தப்பட வேண்டிய விதம் குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இருப்பினும், இது தொடர்பாக இதுவரை பேருந்து சங்கங்களுடன் அவர்கள் எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்தவில்லை என்று பேருந்து சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
எவ்வாறாயினும், இம்முறை பேருந்து கட்டண திருத்தத்தில் எதிர்பார்க்கப்படும் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால், நீதிமன்ற நடவடிக்கைகளை நாடவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.
இது குறித்து ‘அத தெரண’ தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் வினவியது.
வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணை ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அமைச்சரவையின் அனுமதி கிடைத்தவுடன் பேருந்து கட்டண திருத்தம் அமுல்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


