நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வாரம்!

இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் நாடு தழுவிய ரீதியில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் கலாநிதி பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்பு பெருகும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அழிப்பதற்காக கடந்த ஜூன் 8, 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

டெங்கு தடுப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்கும், நோய் பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கும் உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் மற்றுமொரு டெங்கு ஒழிப்பு வாரம் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.