ஹொரணை, அங்குருவாதொட்ட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் நேற்று (03) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதேநேரம், இந்த அனர்த்தத்தில் காயமடைந்த மேலும் 7 பேர் சிகிச்சைக்காக ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டபோது குறித்த இல்லத்தில் 72 பேர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்தினை அடுத்து அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள், அவசரகால மீட்புப் பணியாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 44 பேரை காயமின்றி மீட்டனர்.
பராமரிப்பு இல்லத்தின் சில பகுதிகளில் வேகமாகப் பரவிய தீ, தீவிர தீயணைப்பு முயற்சிக்குப் பின்னர் இறுதியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீ விபத்தைத் தொடர்ந்து ஆரம்பத்தில் 11 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர், அந்த வளாகத்திற்குள் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பலர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
தேடுதல் மற்றும் விசாரணைகள் தொடர்வதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
தீ விபத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
தீ எப்படி ஏற்பட்டது என்பதையும், ஏதேனும் பாதுகாப்பு விதிமீறல்கள் இந்தத் துயரத்திற்குக் காரணமாக அமைந்தனவா என்பதையும் கண்டறிய, புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
இன்று காலை நீதிபதி விசாரணை நடத்தப்படவுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த மேலதிக விவரங்களை நீதித்துறை மருத்துவ அதிகாரியின் அறிக்கை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், மீட்புப் பணிகள் தொடர்வதால் இடம்பெயர்ந்த 51 முதியவர்களுக்கு படகொட ஆரம்பப் பாடசாலையில் தற்காலிக தங்குமிடத்தை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஹெரைணை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


