இன்று முதல் அஸ்வெசும பணத்தை எடுக்கலாம்!

அஸ்வெசும’ நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மே மாத கொடுப்பனவுத் தொகை இன்றைய தினம் (29) அவர்களின் வங்கிக் கணக்குகளில் உத்தியோகபூர்வமாக வைப்பீடு செய்யப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, தமக்குரிய கொடுப்பனவுகளைப் பயனாளிகள் இன்றைய தினம் முதல் தங்களது ‘அஸ்வெசும’ வங்கிக் கணக்குகளினூடாக நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் தகுதிபெற்ற 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மே மாத கொடுப்பனவாக, இந்த குழுவினருக்கு மொத்தம் 312 கோடியே 56 இலட்சம் ரூபாய் (ரூ. 3,125,600,000) வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்யப்படவுள்ளது.

அதேவேளையில், இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள 70 வயதுக்கு மேற்பட்ட 73,663 முதியோர்களுக்கான மே மாத கொடுப்பனவாக 36 கோடியே 83 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் (ரூ. 368,315,000) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்யப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை மேலும் விபரித்துள்ளது.

இதன் மூலம் நாடளாவிய ரீதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான முதியோர்கள் இன்றைய தினம் முதல் தங்களது கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.