தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தவெக 108 இடங்களைப் பெற்றும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தொங்கு சட்டப்பேரவை உருவாகியுள்ளது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்திருக்கும் நிலையில் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை கோரியிருந்தது.

இதற்கிடையில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சியாக செயல்படுவதில்தான் விருப்பம் எனத் தெரிவித்திருக்கும் நிலையில், திமுகவின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கும் முனைப்பில் அதிமுக பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக விசிக, இடதுசாரிகள் தனித்தனியாக அவர்களது கட்சி செயற்குழுக் கூட்டங்களில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். மற்றொருபுறம், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் ஆலோசனை செய்து வருகிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த நிலையில், நேற்று ஆதரவு கேட்டு வந்த தவெக இணை பொதுச்செயலர் சி.டி.ஆர். நிர்மல் குமார், இன்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், ஆதரவு கடிதத்தை தவெக இணை பொதுச்செயலர் சி.டி.ஆர். நிர்மல் குமாரிடம் வழங்கினர்.

தவெக 108 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் 5 எம்.எல்.ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட் 2 எம்.எல்.ஏக்கள் என தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியின் பலம் 114 ஆக உயர்ந்துள்ளது.

இன்னும் பெரும்பான்மைக்கு இன்னும் 4 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை உள்ளது. இதற்கிடையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவகத்துக்கு செல்லும் விஜய், நன்றி தெரிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தவெக தலைவர் விஜய் இன்று மாலை 6.30 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.