வி.ரி.சகாதேவராஜி)
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (02) சனிக்கிழமை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனின் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து உயர்ஸ்தானிகருக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
குறிப்பாக தமிழர் பகுதிகளில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்புக்களால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அரசியல் தீர்வு விவகாரத்தில் தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளையும், தற்போதைய கள நிலவரங்களையும் நேரில் கேட்டறிந்த உயர்ஸ்தானிகர் அவர்கள், தமிழ் மக்களின் ஜனநாயக விழுமியங்கள், மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்களில் கனேடிய அரசாங்கம் தொடர்ந்தும் மிகுந்த அக்கறையுடன் செயற்படும் என உறுதியளித்தார்.
இச்சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத், ஞா.ஶ்ரீநேசன் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை விரிவாக முன்வைத்திருந்தனர்.


