அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 48 மணித்தியால அடையாள வேலைநிறுத்தம் இன்று (11) காலை 8.00 மணியுடன் நிறைவடைவதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் விசேட மத்திய குழு கூட்டத்தில் நேற்று இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
சுகாதார அமைச்சு இணங்கிய நிபந்தனைகளை மீறி, உள்ளகப் பயிற்சி நியமனங்களை வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் காலை ஆரம்பமான இந்த வேலைநிறுத்தம் நேற்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அரச மருத்துவமனைகளுக்கு வருகை தந்த நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.


