2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு, அரசாங்கத்தின் நிதி அனுசரணையில் வெளிநாடுகளில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர்வதற்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2026/2027 கல்வியாண்டிற்காக சுமார் 25 முதல் 50 மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 200 மாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த புலமைப்பரிசில் திட்டத்திற்கு அனைத்து பாடத்துறைகளைச் சேர்ந்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். எனினும், வளர்ந்து வரும் உலகளாவிய துறைகள் மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இல்லாத புதிய பாடத்துறைகளைத் தெரிவு செய்வோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் QS, Times Higher Education அல்லது Shanghai தரவரிசையில் முதல் 500 இடங்களுக்குள் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தைத் தெரிவு செய்தல் வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சின் இணையத்தள வாயிலாக எதிர்வரும் 2026 மே 11 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒரு மாணவருக்கு ஆண்டுதோறும் சுமார் 20 மில்லியன் ரூபாய் வரை பெறுமதியான புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.
இந்த புலமைப்பரிசில் திட்டத்தில் முழுமையான கல்விக்கட்டணம் மற்றும் மாதாந்த வாழ்க்கைச் செலவு,மருத்துவக் காப்பீடு மற்றும் விமானப் பயணச் சீட்டு,விசா கட்டணம் மற்றும் ஆரம்பக் குடியேற்றச் செலவுகள் ஆகிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தெரிவு செய்யப்படும் மாணவர்கள் தமது பட்டப்படிப்பை நிறைவு செய்த பின்னர் நாட்டுக்குத் திரும்பி, நாட்டின் தேசிய அபிவிருத்திக்கு பங்களிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


