எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட கரையோர சூழலை மீள் உருவாக்கம் செய்தல் தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் Acted நிறுவனத்தின் நாட்டுக்கான பணிப்பாளர் கிரன்லவரி பங்குபற்றுதலுடன் புதிய மாவட் செயலக மாநாட்டு மண்டத்தில் இன்று (07) இடம் பெற்றன.
வட கிழக்கு மாகாணத்தில் Acted நிறுவனத்தினால் மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட கரையோர உயிர்பல்வகைமையை மீள் உருவாக்கம் செய்து மீனவ சமூகத்தின் பொருளாதார ரீதியில் மேம்படுத்தும் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
கால நிலை மாற்றத்தினால் சிறிய மீன்பிடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டமையால் கரையோர பகுதியில் இயற்கை சூழ்நிலையை மீள் அமைத்து மீனவ சமூகத்தின் வாழ்வாதார வசதியை மேம்படுத்தி அனைவரையும் வலுப்படுத்தும் செயற்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் பி.பிரதீபன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம், தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் , மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநிதன், Acted நிறுவன உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், துறைசார் நிபுணர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சுற்றாடல் அமைச்சு மற்றும் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பல நிறுவனங்களுடன் இணைந்து காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


