பசளைகளை வழங்குவதற்கான முன்னாயத்த கலந்துரையாடல்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் சிறுபோகத்தினை மேற்கொள்வதற்கு விவசாயிகளுக்கு தேவையான பசளைகளை வழங்குவதற்கான முன்னாயத்த கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே எஸ். அருள்ராஜ் அவர்களது தலைமையில் தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுன் ஏற்பாட்டில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (18) இடம் பெற்றது.

மாவட்டத்தில் எதிர்வரும் தினங்களில் சிறுபோக நெற்செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதை முன்னிட்டு விவசாயிகளுக்கு தேவையான பசளையினை வழங்குவதற்கு உரக் கம்பனி பிரதி நிதிகளுடன் அரசாங்க அதிபர் கலந்தரையாடலை மேற்கொண்டார்.

இம் முறைமாவட்டத்தில் 38274 ஹெக்டர் நிலங்களில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இக் கலந்துரையாடலின் போது 7234 மெற்றிக் தொன் யூரியா, 1078 மெற்றிக் தொன் ரீ.எஸ்.பி, 1709 மெற்றிக் தொன் எம்.ஓ.பி. உரங்களை வழங்குவதாக உரகம்பனி பிரதிநிதிகள்
தெரிவித்தனர்.

இந் நிகழ்வில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜெகன்நாத், விவசாய அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன், பெரும்பாக உத்தியோகத்தர்கள், உர செயலக உத்தியோகத்தர்கள், துறைசார் திணைக்கள அதிகாரிகள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.