மட்டக்களப்பில் கடற்றொழில் அமைச்சர் “தித்வா” புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் அழைப்பின் பெயரில் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு மாவட்டத்தில் உள்ள 16 மீனவ சங்கத்தினருக்கு 26.9 மில்லியன் பெறுமதியான மீன்பிடி உபகரணங்களை இன்று (11) பழைய மாவட்ட செயலத்தில் வழங்கி வைத்தார்.

கடந்த “தித்வா” புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு பெறுமதியான படகுகள், காசொலைகள், புதிய வள்ளங்கள் மற்றும் திருத்தப்பட்ட வள்ளங்கள், மற்றும் பல மீன்பிடி உபகரணங்கள் இதன் போது வழங்கப்பட்டன.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் எமது நாட்டு ஜனாதிபதி இரவு பகலாக நாட்டு மக்களுக்கு சேவையாற்றி வருவதாக தெரிவித்தார்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ், சினோர் நிறுவன பணிப்பாளர் அஜித்த எதிரிசிங்க , கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் அப்துல்லாஹ், மாவட்ட நீர் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர் ஜெகப் நெல்சன்,
கால் நடை மற்றும் காணி விவசாய அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மீனவ சங்க தலைவர்கள் , கடற்றொழிலாளர்கள் உயரதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.