எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எரிபொருள் விநியோகம் தொடர்பாக மாவட்ட செயலாளரின் அறிவுறுத்தலின்பேரில் பிரதேச செயலகத்தில் விசேட கலந்துரையாடல் (03) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வாழைச்சேனை மீன்பிடி துறைமுக முகாமையாளர், மீன்பிடி பரிசோதகர், கள உத்தியோகத்தர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முகாமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது, பொதுமக்களுக்கு கொள்கலன்களில் (கேன்) பெற்றோல் விநியோகம் வழங்குவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டது. எனினும், அத்தியாவசிய தேவைகளுக்காக, குறிப்பாக மீன்பிடி மற்றும் விவசாய (வயல்) தேவைகளுக்காக, நிர்ணயிக்கப்பட்ட அளவில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.


