தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஆல்தீன் அமீர் நியமனம்

நூருல் ஹுதா உமர்

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி ஆல்தீன் அமீர் இன்று (03.03.2026) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மூவின இளைஞர் யுவதிகளின் கல்வி, கலை, கலாசாரம் மற்றும் விளையாட்டு துறைகளில் தலைமைத்துவத்தை சிறப்பாக முன்னெடுத்து வந்த இவர், இதற்கு முன்னர் கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

இறக்காமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆல்தீன் அமீர், இளைஞர்களின் திறன் மேம்பாடு, சமூக ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவ வளர்ச்சி ஆகிய துறைகளில் பல்வேறு முன்னோடி திட்டங்களை நடைமுறைப்படுத்தி பாராட்டுகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக, பின்தங்கிய பிரதேச இளைஞர்களை கல்வி மற்றும் தொழில் பயிற்சிகளின் மூலம் முன்னேற்றம் அடையச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

இவரது நியமனம் கிழக்கு மாகாண இளைஞர் சமூகத்தில் புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இளைஞர் சக்தியை தேசிய முன்னேற்றத்துடன் இணைக்கும் பல்வேறு திட்டங்கள் அவரது தலைமையில் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.