நிந்தவூர் இமாம் றூமி வீதியின் காபர்ட் இடும் பணி ஆதம்பாவா எம்.பி.யினால் ஆரம்பித்து வைப்பு!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் இருந்த நிந்தவூர் இமாம் றூமி வீதி தொடர்பாக அப்பிரதேச மக்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தியதன் காரணமாக சுமார் 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில், இவ்வீதிக்கான காபர்ட் இடுகின்ற பணி அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கரையோரப்பிரதேச ஒருங்கிணைப்புக்
குழுத்தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் நேற்று (03) செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நி்ந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லதீப், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அக்கரைப்பற்று பிராந்திய பிரதம பொறியியாளர் ஏ.எம்.உவைஸ், கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் இஸட்.ஏ.எம்.அஸ்மி,
நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்களான எம். சம்சுன் அலி, ஏ. இப்திகார், நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் சிஹாபுதீன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச்செயலாளர் ஆசிரியர் எஸ்.எம்.ஆரிப் உட்பட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், பிரஜாசக்தியினுடைய நிந்தவூரின் தவிசாளர்கள்,
தேசிய மக்கள் சக்தியின் பிரதேச செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.