கடந்த 48 மணிநேரங்களாக மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு முழுமையான போர்க்களமாக மாறியுள்ளது.
நேற்று காலை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துலா அலிகமேனி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பெப்ரவரி இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் அணுசக்தி மற்றும் இராணுவ நிலைகள் மீது நடத்திய ‘ரோரிங் லயன்’ (Roaring Lion) வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்போது இரு நாடுகளும் நேரடியாக ஏவுகணைப் போரில் ஈடுபட்டுள்ளன.
அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேலியப் போர் விமானங்கள் ஈரானின் தெஹ்ரான், இஸ்ஃபஹான் மற்றும் நடன்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் மையங்கள் மற்றும் ஏவுகணைத் தளங்களை இலக்கு வைத்துத்து தாக்கியுள்ளது.
இதில் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஈரான் இதற்கு பதிலடி கொடுத்துவருகிறது.
ஈரான் தனது ‘புரட்சிகர காவல்படை’ (IRGC) மூலம் இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஹைஃபா நகரங்களைக் குறிவைத்து ‘ஃபத்தா’ வகை அதிவேக ஏவுகணைகளை ஏவியுள்ளது.
இஸ்ரேலின் ‘அயன் டோம்’ (Iron Dome) மற்றும் ‘ஆரோ’ (Arrow) பாதுகாப்பு அமைப்புகள் பல ஏவுகணைகளைத் தடுத்தாலும், சில ஏவுகணைகள் இலக்குகளைத் தாக்கியுள்ளன.
அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட தாக்குதலை பார்க்கும்போது இந்த மோதல் திடீரென ஏற்பட்டதல்ல எனவும் இதன் பின்னணியில் நீண்டகாலப் பதற்றம் உள்ளது என்பதும் தெளிவாக தெரிகிறது.
ஈரானின் அணுசக்தித் திட்டம் ஆயுதம் தயாரிக்கும் நிலையை எட்டிவிட்டதாக ஐநா ஆய்வாளர்கள் எச்சரித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்காக இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறுகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் ஜெனீவாவில் நடைபெற்ற இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாதது போருக்கு நேரடித் தூண்டுகோலாக அமைந்துள்ளது.
சரி இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும்தானே மோதல் இதில் இடையில் அமெரிக்கா எங்கிருந்து வந்தது?
ஆரம்பத்திலிருந்தே அமெரிக்காவுக்கு ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதும் தற்போது அங்கு ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தையும் பிடிக்கவில்லை எனவே ஈரானின் இந்த அரசாங்கத்தை ஒழிக்கவேண்டும் எனவும் அணு ஆயுத உற்பத்தியை தடுக்கவேண்டும் எனவும் அமெரிக்கா திட்டமிட்டது.
தற்போது இஸ்ரேலுக்கு உதவுவது போன்று அமெரிக்கா சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டது.
இதற்காகவே ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) என்ற பெயரில் அமெரிக்கா இந்தத் தாக்குதலில் இணைந்துள்ளது.
தற்போது மத்திய கிழக்கில் போர் சூழல் அதிகரித்து வரும் நிலையில் உலக நாடுகளும் நாம் உட்பட பெரும் அச்சத்தில் இருக்கின்றன.
காரணம் மத்தியகிழக்கில் போர் ஏற்பட்டாலும் அது அங்கு மட்டுமல்லாது உலகளவில் உள்ள சிறிய நாடுகளையும் பாதிக்கக்கூடும்.
போர்ச் சூழலால் ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 120 டொலர்களைக் கடந்து உயர்ந்துள்ளது.
இதனால் பெற்றோல் உள்ளிட்ட பெரிபொருட்களுக்கு உலக நாடுகளில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் .
ஈரான், இஸ்ரேல், ஜோர்டான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் தமது வான்பரப்புகளை முழுமையாக மூடியுள்ளன.
இதனால் சர்வதேச விமானப் போக்குவரத்து பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இலங்கையிலுள்ள விமான நிலையங்களும் விமானங்கள் அவசரமாக தரையிறங்கக்கூடிய வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தியா இரு தரப்பையும் அமைதி காக்குமாறு வலியுறுத்தியுள்ளது. ஈரானில் உள்ள சுமார் 4,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ போன்ற ஒரு மீட்புப் பணியை வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.
இலங்கையும் மத்தியகிழக்கில் இருக்கும் இலங்கை மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் ஐநா பாதுகாப்புச் சபை அவசரமாகக் கூடிய போதிலும், அமெரிக்காவின் வீட்டோ (Veto) அதிகாரத்தால் போர் நிறுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதில் சிக்கல் நீடிக்கிறது.
எனினும், ஈரான் தனது ‘அச்சு எதிர்ப்பு’ (Axis of Resistance) அமைப்புகளான ஹிஸ்புல்லா மற்றும் ஹூதி கிளர்ச்சியாளர்களை முழுமையாகப் போரில் ஈடுபடுத்தினால், இது ஒரு உலகப் போராக மாறக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.


