50 கோடி ரூபா போதைப்பொருள் மீட்பு விவகாரம் முன்னாள் இராணுவ அதிகாரி உட்பட நால்வர் கைது!

அஹுங்கல்ல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று (27) மாலை பலப்பிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போது ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, அம்பலாங்கொடை பகுதியில் உள்ள வீடொன்றைச் சோதனையிட்டபோது, அங்கிருந்த பெண்ணொருவரிடமிருந்து 6 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 7 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.

அப்பெண்ணிடமிருந்து 9 மில்லிமீற்றர் ரகத்தைச் சேர்ந்த 30 தோட்டாக்களும், 3.8 ரகத்தைச் சேர்ந்த 30 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த பெண்ணிடமிருந்து அந்தப் போதைப்பொருட்களை எடுத்துச் செல்ல வந்த மற்றொரு நபரிடமிருந்து தலா 6 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களைக் கைப்பற்ற பொலிஸாரால் முடிந்தது.

இந்தக் கடத்தல் கும்பலில் கைதான நால்வரில் ஒருவர் முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரி என தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், இந்த முழு நடவடிக்கையும் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரால் வழிநடத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சுற்றிவளைப்புடன் சேர்த்து, இவ்வருடத்தில் மட்டும் தென் மாகாணத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு 100 கிலோகிராமைக் கடந்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த வருடம் (2025) இதே மாகாணத்தில் 1,705 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களும், 432 சட்டவிரோத ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.

கடல் மார்க்கமாக நாட்டிற்குள் போதைப்பொருள் ஊடுருவுவதைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருப்பின் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.