சொந்தமாக இருக்க இடம் – அழகான வாழ்க்கை – மட்டக்களப்பில் காசோலை வழங்கல்

“சொந்தமாக இருக்க இடம் – அழகான வாழ்க்கை ” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பயனாளிகளுக்கான காசோலைகளை இன்று வழக்கி வைக்கப்பட்டது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் தங்கத்துரை சுபாஸ்கரன் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் பங்கு பற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று 25.02.2026 திகதி இடம் பெற்றது.

வீடமைப்பு நிருமாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான “சொந்தமாக இருக்க இடம் – அழகான வாழ்க்கை ” என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ள 106 பயனாளிகளுக்கு 106 மில்லியன் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் இன்றைய தினம் 15.9 மில்லியன் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட பிரதிநிதிகளும் மாவட்ட செயலக உயரதிகாரிகளும், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.