நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்தியத்தில் நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்களில் விசேட சுகாதார களப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகிலா இஸ்ஸதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இப்பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
பரிசோதனைகளின் போது ஹோட்டல் மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம், அவற்றின் சேமிப்பு முறை, காலாவதி நிலை, சுற்றுப்புறத் தூய்மை மற்றும் பணியாளர்களின் தனிநபர் சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.
குறிப்பாக நோன்பு காலங்களில் அதிகளவில் உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை நடைபெறுவதால், உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவதில் அதிகாரிகள் கவனம் செலுத்தினர்.
மேலும், உணவுகளை சுகாதாரமான முறையில் தயாரித்தல், பாதுகாப்பாக சேமித்தல் மற்றும் தரநிலைகளுக்கு ஏற்ப விற்பனை செய்தல் தொடர்பான விதிமுறைகள் குறித்து உரிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
பொதுமக்கள் பாதுகாப்பான மற்றும் தரமான உணவுகளைப் பெறுவதை உறுதிசெய்வதே இவ்விசேட களப் பரிசோதனையின் பிரதான நோக்கமாகும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


